Sunday, June 5, 2011
காசிருந்தால் கடவுளும் கண் திறப்பார்
அன்பான குடும்பம் ஒன்று
அமைதியாய் வாழ்ததிங்கு
அளவான வருமானம்
அதுவே போதுமென்று
அடக்கமாய் அட்டகாசம் செய்யாது
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தான்
கறுப்பிலே வேலையென்றால்
கண்டிப்பாய் சொல்லிடுவான் நோ என்று
உண்ண உணவுண்டு
உடுப்பதற்கு நல்ல உடையுண்டு
உறைவதற்கு அழகான வீடுண்டு
இனியென்ன வேண்டும் நமக்கென்று
இனிமையாய் வாழ்ந்திட்டான்
ஆடம்பரம் என்றாலே அது
நமக்கெதற்கு என்றிடுவான்
நாட்டிலே நாமிருந்த கோலத்தை
எண்ணிப்பார் என் இனியவளே என்றிடுவான்
பனை ஓலை வேய்ந்த வீட்டினிலே
பக்குவமாய் எரிகின்ற அரிக்கன் லாம்புடனே
நாமிருந்த வாழ்க்கைதனை நினைத்துப்பார்
என்றே பேசிடுவான்
கடகத்தில் கத்தரிக்காய் வாழைக்காய்
கருவாடு என்றெல்லாம்
தலையில் சுமந்தே உன் அம்மா
சந்தைக்குப் போய் வியாபாரம்
செய்ததை மறந்தனையோ நீ என்பான்
மாட்டு வண்டியிலே மண்பாதை வீதியிலே
கூடி நாம் போனவைகள் எல்லாம்
நினத்துப்பார் என்றிடுவான்
வில்லா(வீடு) வேண்டுகின்றார்
வித விதமாய் கார் எல்லாம் ஓடுகின்றார்
வட்டிக்குப் பணம் கொடுக்கின்றார்
வசதியாய் வாழ்க்கை வாழ்கின்றார்
பளபளப்பாய் சாறிகள் உடுக்கின்றார்
பகட்டாய் நகையெல்லாம் அணிகின்றார்
பகலென்றும் இரவென்றும் பாட்டிகள் வைக்கின்றார்
நாம் வந்து வருடங்கள் பத்தாச்சு
கண்ட பயன் என்ன இந்தப் புலம் பெயர் நாட்டினிலே
கால் தூசிக்கும் மதிப்பில்லை நமக்கிங்கு
காசு பணம் இருந்தால்தான்
கடவுளுமே கண் திறப்பார் இந் நாட்டில்
இனியும் பொறுக்க முடியாது என்னால்
இன்றே தேடும் பணமென்றாள்
தத்துவங்கள் எல்லாமே வீசி எறிவீர் இன்றோடு
கொள்கை என்று சொன்னவற்றை
கொலை பண்ணி எறியுமையா
தமிழன் என்றோர் இனமுண்டு-இங்கே
தனித்துவமாய் அவனுக்குச் சில குணமுண்டு
நாமும் சேர்வோம் அவரோடு
நன்றே வாழ்வோம் பணத்தோடு
இது ஒன்றும் புதினமில்லை வெளிநாட்டில்
பயப்பட ஒன்றுமில்லை, பாவம் நீங்கள்
ஒன்றுமே தெரியாது உங்களுக்கு
எல்லாமே சொல்லி வைத்தாள் பக்குவமாய்
மாண்புமிகு மனைவியவள்
இன்று நாட்டை வெறுத்திட்டான்
நல்ல கொள்கைகளை விட்டிட்டான்
தானிருந்த நிலமைதனை
சத்தியமாய் மறந்திட்டான்
பேராசை பிடித்தவனாய்
இரவு பகலாய் வேலை செய்கின்றான்
பணத்திற்காய் பாசத்தையே விற்றிட்டான்
வட்டிக்குப் பணமென்றால் எப்பவுமே ரெடி என்பான்
நல்ல நட்பையெல்லாம்
தூர வீசி எறிந்திட்டான்
காசுக்காய் நயவஞ்சகங்கள்
சளைக்காமல் செய்திடுவான்
சிறையிலே இருப்பதற்கும்
சித்தமே எப்போதுமென்பான்
சட்டத்தை மதிக்காமல்
கடத்தல்கள் செய்திடுவான்
சேர்த்திட்டான் பணமதனை ஒருவாறாய்
நிம்மதியை இழந்திட்டான்
பணக்காரன் ஆயிட்டான்
பாவம் அவன்
உண்மையில் பணக்காரன் என்றால்
என்னவென்று புரியவில்லை அவனுக்கு
பாவம் அவன்.
Thursday, June 2, 2011
தமிழைத் தேடி.........
புலம்பெயர் நாட்டினிலே
புளுகு தமிழ் கேட்டிடலாம்
நல்ல புறம் சொல்லும் தமிழ் கேட்டிடலாம்
வசை பாடும் தமிழ் கேட்டிடலாம்
நல்ல வஞ்சனை செய்யும் தமிழ் கேட்டிடலாம்
தண்ணி அடித்த பின்னே வரும்
தளதளக்கும் தமிழ் கேட்டிடலாம்
இனிய தமிழ் கேட்க எனக்கோர் ஆசை எழுந்ததனால்
முயன்றே நானும் சென்றேன் தமிழ் நாட்டிற்கு
உல்லாச விடுதி ஒன்றில்
உறைவோம் சில நாள் என்றே
சென்றேன் நானும் உள்ளேயே
காரிகை ஒருத்தி கண் அசைத்தே வரவேற்றாள்
"என்ன வேண்டும்" என்றே இனிதாய் கேட்டு நின்றாள்
அறை ஒன்று வேண்டும் என்றேன் ஆசுவாசமாய்
அதிசயமாய்ப் பார்த்த அவள்
கேட்டாள் மீண்டும் அதை "என்ன வேண்டும்"
அறை ஒன்றே வேண்டும் என்றேன்
அடிக்குமாய்ப்போல் என்னை முறைத்தே
அதே கேள்விதனை அழுத்திக் கேட்டாள்
ஆத்திரம் கொப்பழிக்கச் சொன்னேன் நான்
அறை தர முடியாதா ஆணவம் பிடித்தவளே
அறைந்தாள் என் கன்னத்தில் படீரெனவே
ஐயோ என்று நான் அலறித் துடித்திட்டேன்
என்ன இவள் அடித்தே விட்டாள் என்னை
என்ன பிழை செய்தேன் நான்
ஆற்றாமை மேலோங்க
"றூம்" தானே நான் கேட்டேன்? ஏன் அடித்தாய்
எனக்கென்றேன்
அப்படித் தமிழில் றூம் என்று கேளுமையா
அது என்ன அறை-இங்கே இதுதான் அறை என்றாள்
வெட்கித்து நின்றேன் நான் தமிழை எண்ணி
வீங்கிய கன்னமதை நீவிக்கொண்டே
நேரம் ஓடியது விரைவாக
எனது மணிக்கூடோ ஓடவில்லை இவ்வேளை
மற்றவரை மணி கேட்க என் தன் மானம் தடை போட
புதிதாய் வேண்டுவோம் மணிக்கூடு என்றே
சென்றேன் நானும் வெளியாலே
தேடி அலைந்தேன் மணிக்கூட்டுக் கடையொன்றை
கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை அக்கடையை
மனமது சோர காலது வலிக்க சலித்து நிற்கையிலே
கண்டேன் நானும் ஓர் கனவானை
மறக்காமல் கேட்டேன் நான்
மணிக்கூட்டுக்கடை எங்கேனும் உண்டா
அதிசயமாய்ப் பார்த்தே அவர் சொன்னார்
அப்படி ஒரு கடை எவ்விடமும் இல்லை
மடையா நீ என்று திட்டினேன் மனதாலே
நடந்தேன் இன்னும் சில தூரம் நம்பிக்கையுடனேயே
நல்லவராய்த் தெரிந்த இன்னோருவர்
வந்தார் என் முன்னாலே
கேட்டேன் இரக்கமதாய் அவரிடமும்
மணிக்கூட்டுக் கடையை காட்டும் எனக்கென்று
மிரண்டு போன அம் மனிதர்
தனக்குத் தெரிந்தது தமிழ் மட்டுமே என்றிட்டார்
"ஐயா" பேசுவது நானும் தமிழ்தானே
சோன்னேன் நானும் பவ்வியமாய்
அது என்ன மணிக்கூடு அந்நிய பாசை பேசாதே
கோவமாய்ப் பதில் சொன்னார்
தெரியாதா உங்களுக்கு "watch" என்றேன்
வாச்சா அப்படிப் பேசும் தமிழ் என்றார்
திகைத்தேன் நானும் திரும்பவும் ஓர்முறை
காட்டினார் கடையொன்றை இப்போது
வாங்கினேன் நானும் வாச்சொன்றை
தமிழிற்காய் மீண்டும் வெட்கித்தபடியே
அடைந்தேன் விடுதியை நானும் அலுப்புடனே
அந்தக் காரிகையே மீண்டும் வரவேற்றாள்
அமர்ந்தேன் ஓர் இடத்தில் ஆறுதலாய்
பசியோ சிறிதாய் வயிற்றைக் கிள்ள
பார்த்தேன் நானும் அக்கம் பக்கம்
கோப்பி ஒன்று தட்டில் வந்தது அழகாக
பசியை விரட்ட இதுவா எனக்கு
வந்தே சொன்னாள் அன்புடனே
சாப்பிடுங்க சார் சாப்பிடுங்க
என்னத்தைச் சாப்பிட நான்
பசியோடு உள்ளவனைப் பழிக்காதே நீ என்றேன்
பகிடிவிடாமல் சாப்பிடுங்க இதை என்றாள்
சாப்பாடே இல்லாமல் சாபிடுவதெவ்வாறு
பரிகாசம் செய்யாதே பாவம் உனக்கே என்றேன்
காப்பியைச் சாப்பிடுங்க ஆறினால் அநியாயம் தான் என்றாள்
கோப்பியைக் குடிக்கத்தான் முடியுமென்று
சத்தமாய்ச் சொல்லி என் கன்னத்தில்
நானே அடித்து விட்டேன்
இல்லை அறைந்து கொண்டேன்
தமிழிற்காய் வெட்கித்தபடியே
கோப்பியைக் குடித்துவிட்டே
கனமான சிந்தனையில் நான் இருந்தேன்
சாப்பாட்டுச் சிந்தனையை அறவே கைவிட்டு
சரியான நித்திரை ஒன்றைக் கொள்வோம் இப்போது
என்றே எண்ணி நிற்கையிலே
மீன்டும் வந்தாள்! முழி பிதுங்கியது எனக்கு
தூங்கப் போங்க இப்போ என்றாள்
அதிர்ந்து போனேன் ஐயோ என்றே அலறிவிட்டேன்
தூக்கில் தொங்க விடுவதற்கு
செய்த குற்றமென்ன சொல் என்றேன்
நேரம் என்ன தெரிகிறதா?
தூங்க வைக்கிறேன் பார் என்றாள்
நடுங்கிப் போய் நான் சொன்னேன்
நாளையே போறேன் நாட்டிற்கு
நித்திரை கொள்ள முடியுமா இப்போ நான்
கேட்டேன் படபடக்கும் நெஞ்சுடனே
அதையே சொன்னேன் தானும் என்றாள்
இருந்த தமிழும் மறந்து போக
அடுத்த நாளே வந்து சேர்ந்தேன் இவ்விடமே
தமிழிற்காய் வெட்கித்தபடியே!
குரும்பையூர் பொன் சிவராசா
ponnsivraj@hotmail.com
Subscribe to:
Comments (Atom)

