Monday, May 30, 2011

கள்ளுக் கொட்டில்


தம்பற்றை கள்ளுக்கொட்டிலிலை
சரியான சனக்கூட்டம்
இளையவர் பெரியவர்
இளந்தாரிப் பெடியன்கள்
எல்லோரும் இங்கு சரிசமன் தான்
சமத்துவம் என்பது
சரியாகக் கடைப்பிடிக்கப் படுவதும் இங்கேதான்
தன் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ள
தடுத்திடுவார் சிலபேரை முத்தண்ணை
தடுத்த அந்தச் சில பேரிடமே
கையேந்திக் கள்ளுக் குடிப்பார் அந்தண்ணை
பகுத்தறிவென்பது கள்ளிலிருந்துதானோ பிறக்கிறது

ஆண்கள் மட்டும்தான்
இங்கே அனுமதிக்கப் படுவதனால்
எல்லோரும் இங்கே மன்னர் தான்
ராணி இல்லாத ராயாக்கள்
இவர்கள் பாடு கொன்டாட்டம் தான் இங்கு
வீட்டில் வாயே திறக்காத முத்தண்ணை
இங்கே வந்துவிட்டால் முழுநேரப் பேச்சாளர்
அரசியலில் இருந்து தன் வீட்டு அந்தரங்கம் வரை
அவிட்டு விடுவார் அருமையாக முத்தண்ணை
கேட்போரெல்லாம் மெய்மறந்து
சொக்கித்துப் போய்விடுவார்

வீட்டிலே மனிசிக்குப் பயந்த முத்தண்ணை
கள்ளைக் கொஞ்சம் அடித்ததுமே
முழு வீரனாய் மாறிடுவார்
இண்டைக்கு வீட்டை போய்
அவளின்ரை வாயை அடக்கிறேன் பார் என்பார்
ஊத்தடா இன்னொண்டு என்று சொல்லி
அவர் குடிக்கும் அழகே ஓர் தனி அழகு

அக்கம் பக்கத்தார் ஆரேனும் இருக்கினமா
ஆழ்ந்து பார்த்துத்தான்
வீராப்புப் பேசிடுவார் முத்தண்ணை
அரசியல் விவாதமெல்லாம் இங்கேதான்
அக்கு வேறு ஆணி வேறாய் அலசி ஆராய்வார்
அமெரிக்காவில் ஆட்சியை மாற்றக் கூட
இங்கே திட்டங்கள் தீட்டிடுவார்

கள்ளுக்கொட்டிலிலே அரசியல் பேசிய முத்தண்ணை
பெற்றதோ அரசாங்கத்தில் மந்திரிப் பதவி
அனைத்தின் வளர்ச்சிக்கும்
கள்ளுக் கொட்டில்தான் ஆதாரம்
என்பதே அவரின் வாதம்
Five Star Hotel இலை விஸ்க்கி குடித்தாலும்
பிளாவிலே கள்ளை எடுத்து
குவிந்திருக்கும் எறும்பு பூச்சிகளை
அலாக்காக தட்டி எறிந்து விட்டு
அதை உறிஞ்சிக் குடிக்கும் இன்பம்
எங்கே வருமென்பார் முத்தண்ணை
கலம்பிலும் காமட்சி கள்ளுக் கடையை
திறந்து வைத்தே புகழ் ஏணியின்
உச்சிக்கே போய் விட்டார் இந்தண்ணை

சுவீடனுக்கு வந்த அண்ணர்
கள்ளுக் கொட்டிலைக் காணாது
கலங்கியே போய்விட்டார்
கடைசிக் காலத்தில் கள்ளில்லாமல்
காலம் தள்ளுவதெப்படி என்றே
சோர்ந்துவிட்ட முத்தண்ணைக்கு
கனடாவில் கள்ளுக் கடை திறந்த செய்தி
இன்பத்தை அளித்திடவே
அங்கே மாற்றிவிட்டார் தம் இருப்பிடத்தை
"கள்ளில்லா வாழ்வு பாழ்
கள்ளுக் கொட்டில் இல்லாத நாடு பாழ்"
இதுவே முத்தண்ணையின் தத்துவம்.

Saturday, May 28, 2011

தியாகி திலீபன்


திலீபன் என்றதுமே தித்திக்கும் என் மனது
சோகத்தையும் வென்றதொரு புல்லரிப்பு
என் இதயத்தில் எழுந்து வரும்
உலகத்தில் உன்னதமாய் ஓர் உயிர் பிரிந்ததென்றால்
அது அகிலத்தின் தியாகி அவன் திலீபன் இன்னுயிர் தான்
அகிம்சை என்றோர் ஆயுதத்தை கையிலெடுத்தான்
தன்னை தானே சிலுவையில் அறைந்து கொண்டான்


அன்னையர்கள் ஆறாத துயரத்தில்
தம் மார்பில் அடித்தே கதறி அழ
ஆண்களெல்லாம் தம் கண்களிலே
வழிகின்ற விழி நீரை துடைத்தெறிய
அருமைத் தம்பிகளும் அன்புத் தங்கைகளும்
பச்சிளம் குழந்தைகளும்
அண்ணா! அண்ணா! என்று அழுதிட்ட குரலோ
வானத்தை எட்டி நிற்க
தன் உயிரையும் உடலையும்
துடி துடிக்க தற்கொடையாக்கிவிட்டான்
திலீபனாய் நின்ற அவன் தியாகியாய் மாறிவிட்டான்


என்றும் அன்பான திலீபன்
எப்போதும் அகலாத புன்சிரிப்பு
மற்றவர்க்காய் மட்டும் வாழ்ந்த புனிதனவன்
எம்மவர்க்காய், எம் தமிழிற்காய், தமிழ் ஈழ மீட்பிற்காய்
தன்னையே ஈகின்ற கொடிய விரதமதை
திண்ணமதாய் செய்தே முடித்திட்டான்
தமிழர்க்கு விடுதலை வேண்டி அவன்
பெரும் தவமே செய்திட்டான்
விண்ணிலிருந்து பார்ப்பேன்
விடுதலையை என்றுரைத்தே
சென்றுவிட்டான் வெகுதூரம் எமை விட்டு


நவ இந்தியாவிடம்
நயமாய்க் கேட்டான் நீதியொன்றை
அகிம்சை சாத்வீகம் இவையல்லோ
ஆன்மீக இந்தியாவை இளக வைக்கும் என நினைத்தான்
"உன்னையே வருத்தி உணர்வுகளை அடக்கி
மாற்ற முயன்றாய் நீ அவர் மனதினையே"
வஞ்சகர்கள் நெஞ்சுக்குள் வரவில்லை இரக்கமது
எடுத்திட்டார் உன் இன்னுயிரை
வதைத்திட்டார் எம் தமிழினத்தை
தமிழ்நாட்டுத் தமிழரும் சேர்ந்தே கலங்கி நின்றார்
உன் நிலை கண்டு


காந்தி பிறந்த மண்ணில் தவறுதலாய்ப் பிறந்தவர்கள்
இங்கு தமிழீழத்தில் காந்தீயம் சாவதற்கு
அடிப்படையாய் இருந்திட்டார்
கல்லுக்குள் ஈரமுண்டு கண்டிடலாம் சில வேளை
இந்தக் கயவர் நெஞ்சுக்குள்
கடுகளவும் ஈரமில்லை
வெறி பிடித்த இந்திய ராணுவமே
வெறும் ஆயுதத்தை மட்டுமா ஒப்படைத்தார்
தமிழர் படை உன்னிடத்தில்
எம் மக்கள் உயிரையுமே ஒப்படைத்தார் உனை நம்பி
புத்தரின் புனிதர்கள் கொடியவர் என்பதனால்
காந்தியின் புதல்வர்கள் என்றல்லோ
எண்ணி உமை நாம் நம்பிட்டோம்
துரோகியாய் நீர் இருக்க
தூய நண்பனாய் உனை நினத்தோம்
அபயம் அளிக்க நீர் வருவதாய்
ஆவலுடன் எதிர்பார்த்தோம்
அன்புடன் உமை வரவேற்றோம்
ஆறுதல் தருவாய் நீ எனவே
அக மிக மகிழ்ந்திட்டோம்



பிராந்திய வல்லரசாய் உன் வன்மத்தைக் காட்ட நீ
தெரிவு செய்திட்டாய் ஈழ தேசமதை
உண்ணா நோன்பிருந்தே உம் உள்ளமதை
மாற்ற அவன் முயன்றே தோற்றிட்டான்
தமிழன் உரிமை ஒன்றும் உன் தயவால் கிட்டாது
என்றே உணர்ந்தான் எம் திலீபன்
பூண்டான் கொடிய விரதம் அவன்
நல்லூர்க் கந்தன் வீதியிலே
உணவின்றி நீரின்றி தன் நாக் காய்ந்து
உடலில் உரமின்றி நிற்கத் தயவுமின்றி
மரணத்தை நோக்கி அவன் மகிழ்வுடன் போகையிலும்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!
தமிழீழம் மலரட்டும்!
என்றே எமக்குரைத்தான்
விழிப்பாய் இருங்கள்! விழிப்பாய் இருங்கள்! என
எமை விழித்தே சொன்னான் பல தடவை


பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
பொறுக்கிகள் செய்த அநியாயம் பொறுக்குதில்லையே
பொன்னான எங்கள் தங்கத் திலீபன்
தன் உயிரையே விலை கொடுத்த கொடுமைதனை
நினைக்க நினைக்க நெஞ்சு பொறுக்குதில்லையே
கல்மனம் கொண்ட இந்திய ராணுவமே
கடுகளவும் இல்லையா கருணை உனக்கு
தாய் நாட்டுக்காரர் தருமம் அறிந்தவர்கள்
என்றேதான் நம்பிட்டோம் நாமெல்லாம்
பொல்லாத பாவிகள்
எம் மண்ணை அழித்திட்டார்
நல்ல பண்பை அழித்திட்டார்
எம் பெண்கள் கற்ப்பைப் பறித்திட்டார்
எம் திலீபன் உயிரையும் எடுத்திட்டார்


காந்தியைக் கொல்ல ஒரு கோட்சே
இங்கு எம் திலீபனைச் சாகடிக்க
ஓராயிரம் கோட்சேக்கள்
வெட்கமாயில்லை உங்களுக்கு
காந்தி உயிருடன் இன்றிருந்தால்
உம் செயல் கண்டு தன்னையே மாய்த்திருப்பார்
அன்றே உயிர் நீத்ததனால்
இன்று தப்பிப் பிழைத்துவிட்டார்


நல்லூர்க் கந்தா நான் உனைக் கேட்கின்றேன்
இது நியாயமா சொல்லுமையா
தமிழ்க் கடவுள் நீ என்றால்
தமிழர்க்காய் எம் திலீபன் உயிர் காக்க
ஏன் மறந்தாய் சொல்லுமையா


தமிழர்கள் வாழ்விற்காய்
ஈழ தேசத்தின் விடிவிற்காய்
உன் உடலை வருத்தியே
உயிர் துறந்தாய் திலீபா
மறவாது தமிழ் உலகம் உன்னை
இந்த மாநிலத்தில் தமிழ் மனிதன் உள்ளவரை

ஆண்களுக்குச் சமத்துவம் வேண்டும்


போதும் போதும் பொறுத்தது போதும்

ஆண்களே நீங்களெல்லாம் பொறுத்தது போதும்

பொங்கி எழு ஆண்மகனே

சங்கே முழங்கு என்று பொங்கி எழு ஆண்மகனே

இழந்த உன் உரிமையை வென்று எடுக்க

பொங்கி எழு ஆண்மகனே


அன்று நீ சமையல் அறையை எட்டியும் பார்க்கவில்லை

இன்றோ சமையலிலே நீதான் முன்னணியில்

சட்டி பானை என்றால் என்னவென்றே தெரியாமால் நீ இருந்தாய்

இன்றோ சட்டி பானை கழுவுவதில்

நீதான் முதன்மையாய் இருக்கின்றாய்

டிஸ்வோசர் வேண்ட நீ முயற்சி எடுத்திட்டால்

பெண்ணோ அதை தட்டியே கழித்திடுவாள்


ஆண் சிங்கமாய் அன்று நீ இருந்தாய்

இன்றோ அடுப்பூதும் சுண்டெலியாய் நீ இருக்கின்றாய்

அம்மாவின் கையாலே அறுசுவையும் நீ உண்டாய்

இன்றோ ஐரோப்பாவில் அடுப்படியில் நீ வெந்தே சாகின்றாய்

ஆண்கள் கட்டாயம் சம உரிமை பெற்றே ஆகவேண்டும்

சமையலிலே பெண்ணும் சரி பாதி பங்கு வகித்தே தீரவேண்டும்


அன்று அம்மா அம்மா என்று தான்

அழுதன பிள்ளைகள் எல்லாமே

இன்று அப்பா அப்பா என்று அழுவது ஏனோ

பிள்ளைப் பராமரிப்பில் பெண்களுக்கும்

சம பங்கு தந்தே தீரவேண்டும்

பத்து மாதம் சுமப்பது பெண்களென்றால்

பின்வரும் பத்து வருடங்களும்

ஆண்களா பிள்ளைகளைச் சுமக்கவேண்டும்


சம்பளம் வந்தவுடன் சட்டையும் சீலையும்

வேண்டத் திரிகின்றார் பெண்களெல்லாம்

ஆண்களுக்கும் சம உரிமை வேண்டும்

அவர்களையும் மனிதர்களாய் மதிக்கவேண்டும்

அவர்களுக்கும் உடுபுடவை வேண்ட சம உரிமை வேண்டும்

கோட்டும் சூட்டும் வேண்ட அவர்களுக்கும்

நீ பணம் கொடுக்கவேண்டும்


விருந்தாளிகள் வீட்டுக்கு வருவதென்றால்

அன்று அடுப்படியில் நிற்பதெல்லாம்

ஆண்களாய் இருப்பது முற்றாக மாறவேண்டும்

விருந்தாளிகளுடன் கதை அளப்பதெல்லாம் பெண்களென்றால்

வேலை செய்வதெல்லாம் ஆண்களா

பொங்கி எழு ஆண்மகனே!

சரி பாதி உரிமைக்காய்

இன்றே போர்க்கொடி உயர்த்திடுவாய்


நகை நகையாய் வேண்டி நம் பணத்தை எல்லாம்

கழுத்திலும் கையிலும் பொத்திப் பொத்தி

வைத்திருக்கும் பெண் அவளே

ஆணுக்கும் ஆசைகள் உண்டென்று

நீ என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா

இன்றே அரைவாசி நகையை பெறுமட்டும்

போராட்டம் நடாத்திடு ஆண்மகனே!


அரைப் போத்தல் தண்ணி அடித்திட்டால்

அநியாயம் முழுக்க ஆண்தான் செய்திட்டான்

என்று பிதற்றுகின்ற பெண்ணே

நீ வேண்டும் சாறிக்கும் நகைக்கும்

அழகுசாதனப் பொருளுக்கும்

யார் தருகின்றார் பணம்

அளவாய் தண்ணி அடிப்பதற்கு

ஆண்கள் கட்டாயம் உரிமை பெற்றே ஆகவேண்டும்!


ஆணுக்குச் சமத்துவம் வேண்டி

ஐரோப்பிய நாடெல்லாம்

மூலை முடுக்கெல்லாம்

ஆண்கள் போராட்டம் நடாத்தவேண்டும்


சீறுகின்ற பெண்ணை

வீட்டில் நீ ஓர் சிரிப்பால் மழுப்புவதை

நான் நன்கறிவேன்

இழந்த ஆணின் உரிமைகளை

அகிம்சையால் வென்றெடுக்க

ஒன்று பட்டுப் போராடி வெற்றி பெறவேண்டும் நீ

உன் போராட்டம் வெற்றி பெறும்

பெண்ணுடன் சமத்துவமாய்

ஆணே கட்டாயம் நீ வாழ்ந்திடுவாய்!

குரும்பையூர் பொன் சிவராசா

Friday, May 27, 2011

பொய்க்காதல்


நான் உன் அன்புக்காய் ஏங்கினேன்
நீயோ என்
அழகுக்காய் ஏங்கினாய்
நான் உன்
இதயத்தின் ஆழத்தை தேடினேன்
நீயோ என்
உடம்பில் பொன்னை தேடினாய்
நான் உன்னிடத்தில்
உள்ளத்தை தேடினேன்
நீயோ என்னிடத்தில்
உதட்டை தேடினாய்
நான் உன்
குணத்தை நோக்கினேன்
நீயோ என்
பணத்தை நோக்கினாய்
நான் உன்
நாணயத்தை எதிர்பார்த்தேன்
நீயோ என்
சீதனத்தை எதிர்பார்த்தாய்
உண்மைக் காதல் வாழ வேண்டும்
உன் பொய்க்காதல் சாகவேண்டும்
முடிவெடுத்தேன் நான் முடிவாக
உண்மைய்க் காதலுக்காய்
தூர எறிந்திட்டேன்
உன் பொய்க் காதலையே!
உன்னையும் தான்!

கண்ணீர்த்துளிகள்


சோபாவில் படுத்திருந்து
என் எண்ணத்தை பின்னோக்கி ஓடவிட்டேன்
ஆண்டுகள் பல பின் நோக்கி
என் மனம் அசை போட்டே
எம்மவர் வாழ்க்கையினை எண்ணிப் பார்க்கிறது
சிறு குடிசை வீடுகளும்
விருப்புடனே செய்த விவசாயப் பூமிகளும்
காடுகளாய் வளர்ந்திருந்த இயற்கையின் வனப்புகளும்
ஒவ்வொன்றாய் என் மனத்தை தொட்டுச் செல்கிறது

புழுதி கிளப்ப புயல் போல் ஓடிடும் சயிக்கிள்கள்
பஸ் இற்காய் காத்திருக்கும் பெரியவர்கள்
பேசுகின்ற பயமற்ற ஊர் வம்புப் பேச்சுக்கள்
சமையல் முடித்தே சந்திக்கும் பெண்களின்
கலகலப்பான கதை அளப்புக்கள்
காதல் யோடிகள் பற்றி கதை கதையாய்
கிசு கிசுக்கும் இளசுகள்
வஞ்சகமே இல்லாத அந்த நிகழ்வுகள்
என் இதயத்தை கிள்ளி விடுகிறது பலமாக

ஒவ்வோர் வீட்டிலுமே ஒவ்வோர் ராயா
ராயாவும் ராணியுமாய் மகிழ்ந்தே வாழ்ந்திடுவார்
வறுமையிலும் செழுமை காணும் வளமான வாழ்க்கை
உண்மையான ஊழலற்ற அரசாங்கம்
நடப்பது அவர்தம் வீட்டில்தான்
உள்ளத்தின் உணர்வுகள் தான்
அங்கே எழுதாத சட்டங்கள்....

மகிழ்வான அந்தக் கடந்த காலம்
எங்கே தொலைந்தது அந்தக் காலம்?
எங்கே தொலைந்தார்கள்
அந்த உண்மையான மனிதர்கள்?
கண்களிலே கண்ணீர் தடை போடமுடியாமல்
கன்னத்தை ஒரு தரம் துடைத்துவிட்டு
மீண்டும் ஓர் முறை எண்ணத் தலைப்பட்டேன்

காலம் மனிதனை மாற்றுகிறதா?
இல்லை காலத்தை மனிதன் மாற்றுகிறானா?
கேள்வியொன்று எழுந்து வந்து
விடை காணமுடியாமல் விக்கித்து நிற்கிறது!
ஆண்களும் பெண்களுமாய் எத்தனை சிநேகிதங்கள்
கள்ளம் கபடமில்லா உண்மையான நேசங்கள்
அப்போ பணமும் பொருளும் பந்தாவும்
எம்மில் யாரிடமும் இருந்ததில்லை
அன்பு மட்டும் தான் அங்கே அரசாங்கம் நடாத்திற்று
பணத்திற்காய் பாசத்தை கொன்றொழிக்கும் பச்சோந்திகள்
பார்த்ததே இல்லை அன்று நாம் எம்மிடையே
உண்மையாய் உன்னதமாய் வாழ்ந்த
அந்த மனிதக் கூட்டம்
கண்களிலே இன்னுமோர் முறை கண்ணீர்த்துளிகள்
உண்மை அன்புக்காய் உத்தம நட்புக்காய்
ஏங்குகிறதோ எனது மனம்?

காலம் மனிதனை மாற்றவில்லை என்றால்
கல்லு மனம் படைத்த இந்த மனிதர்கள்
எப்படி வந்தார்கள் எங்கிருந்து வந்தார்கள்
இப் புலம் பெயர் நாட்டிற்கு?
மீண்டும் கண்ணீர்த்துளிகள்.
குரும்பையூர் பொன் சிவராசா

முள்ளால் தைத்த நினைவுகளுடன்.....


முள்ளால் தைத்த
முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன்
கடந்தோடிவிட்ட இரண்டு வருடங்கள்
கனவாகவே இது இருந்திருக்கக் கூடாதா
என்றவொரு ஏக்கம்
இன்றும் என் மனதில்
தவியாய் தவிக்கிறது

எம் உறவுகளின்
சாம்பல் மேடுகளில்
பட்டு வரும் காற்றை
சுவாசிக்கும் கொடுமை
அழுகுரல்கள் நிறைந்த
அந்த அவல ஓசையின்
எதிரொலிகளை
கேட்கின்ற சுமைகள்

அரச பயங்கரவாதம்
எம்மவர் சதை தின்று
நரபலி எடுத்த நினைவுகள்

பசியால் துடிதுடித்தே
இறந்து போன சொந்தங்கள்
உடல் உபாதையினால்
உயிர்விட்ட எம் உறவுகள்
நோயின் உச்சத்தில்
ஆஸ்பத்திரியில் அடைக்கலம்
புகுந்தோரையும்
குண்டிவீசிக் கொன்ற கொடுமை

எல்லாமே வெறும் கனவாக
இருந்துவிடக் கூடாதா???
ஒவ்வோர் விடியலிலும்
என்னை நானே கேட்கும்
கேள்வி இது!!

குரும்பையூர் பொன் சிவராசா
ponnsivraj@hotmail.com

நிமிடத்தில் பார்த்து நியமென்று நம்பிடுவார்!



கண்ணும் கண்ணும் பேசியது
அன்றைய காதலிலே
கண நேர சந்திப்பிலும்
காவியம் பேசியது பார்வைகள்,
கை அசைவுகள் ஒவ்வொன்றும்
படித்தன ஆயிரம் கவிதைகள்
ஒவ்வோர் புன் சிரிப்பும்
கொடுத்தன பல நூறு முத்தங்கள்
சந்திப்புகள் ஒவ்வொன்றும்
சரித்திரமாய் முத்திரை பதித்தன
பட்டும் படாமலும்
பயணிக்க நேரும் தருணங்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வோர் தேநிலவாகின
உயிரும் உயிர்ப்பும்
இருந்தது அக் காதலிலே
காலம் காலமாய் காதல் கதை பேசி
களவு களவாய் சந்தித்து
கவிதைகள் பலவும் பரிமாறி
தொடர்ந்தது அக் காதல்.....

இன்றோ
பேஸ்புக்கிலும் செல் போனிலும்
மின் அஞ்சலிலும்
பிறக்கிறது காதல்

இரண்டே நாளில் இரவிரவாய் விழித்திருந்து
கதை எல்லாம் முடிகிறது இன்ர நெற்றில்
நிமிடத்தில் பார்த்து
நியமென்று நம்பிடுவார்
வெப் கமராவில்
இங்கே அன்புக்கு இடமில்லை
வெறும் அறிமுகம் மட்டும்தான் கிடைக்கிறது

அன்று காதல் இல்லையேல் சாதல்
இன்றோ காதல் இல்லையேல் மீண்டும் காதல்
வெட்கம் நாணம் கோவம்
இவை எல்லாம் தொலைந்து போன
கணனிக் காதல் இது
உள்ளங்கள் பேசவேண்டும்
இதயங்கள் கலக்க வேண்டும்
இதுவே உண்மைக் காதல்
உதடுகள் பேசுவது காதல் அல்ல
உடல்கள் கலப்பதும் உண்மைக் காதல் அல்ல

அவசர உலகத்தில் பொய்தான் எல்லாமே
அதற்காக காதலுமா பலியாக வேண்டும்!
கணனியே நீ காதலுக்கு எதிரியே!!

குரும்பையூர் பொன் சிவராசா