இதயம் பேசுகிறது
Saturday, January 14, 2012
புதுவருட வாழ்த்துக்கள்!
சோகத்தில் வாழும் எம்மவர்க்கு, தை பிறப்பதால் வழி பிறக்கும் என்று சொல்வதற்கு என்னிடத்தில் துணிவில்லை. எதிர்காலத்தை எண்ணி ஏங்கி நிற்கும் ஈழத்தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் எம் உரிமை பெற்றிட உழைத்திடுவோம் என்று சபதம் செய்திடுவோம் இப் புது வருடத்திலும்.
Sunday, June 5, 2011
காசிருந்தால் கடவுளும் கண் திறப்பார்
அன்பான குடும்பம் ஒன்று
அமைதியாய் வாழ்ததிங்கு
அளவான வருமானம்
அதுவே போதுமென்று
அடக்கமாய் அட்டகாசம் செய்யாது
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தான்
கறுப்பிலே வேலையென்றால்
கண்டிப்பாய் சொல்லிடுவான் நோ என்று
உண்ண உணவுண்டு
உடுப்பதற்கு நல்ல உடையுண்டு
உறைவதற்கு அழகான வீடுண்டு
இனியென்ன வேண்டும் நமக்கென்று
இனிமையாய் வாழ்ந்திட்டான்
ஆடம்பரம் என்றாலே அது
நமக்கெதற்கு என்றிடுவான்
நாட்டிலே நாமிருந்த கோலத்தை
எண்ணிப்பார் என் இனியவளே என்றிடுவான்
பனை ஓலை வேய்ந்த வீட்டினிலே
பக்குவமாய் எரிகின்ற அரிக்கன் லாம்புடனே
நாமிருந்த வாழ்க்கைதனை நினைத்துப்பார்
என்றே பேசிடுவான்
கடகத்தில் கத்தரிக்காய் வாழைக்காய்
கருவாடு என்றெல்லாம்
தலையில் சுமந்தே உன் அம்மா
சந்தைக்குப் போய் வியாபாரம்
செய்ததை மறந்தனையோ நீ என்பான்
மாட்டு வண்டியிலே மண்பாதை வீதியிலே
கூடி நாம் போனவைகள் எல்லாம்
நினத்துப்பார் என்றிடுவான்
வில்லா(வீடு) வேண்டுகின்றார்
வித விதமாய் கார் எல்லாம் ஓடுகின்றார்
வட்டிக்குப் பணம் கொடுக்கின்றார்
வசதியாய் வாழ்க்கை வாழ்கின்றார்
பளபளப்பாய் சாறிகள் உடுக்கின்றார்
பகட்டாய் நகையெல்லாம் அணிகின்றார்
பகலென்றும் இரவென்றும் பாட்டிகள் வைக்கின்றார்
நாம் வந்து வருடங்கள் பத்தாச்சு
கண்ட பயன் என்ன இந்தப் புலம் பெயர் நாட்டினிலே
கால் தூசிக்கும் மதிப்பில்லை நமக்கிங்கு
காசு பணம் இருந்தால்தான்
கடவுளுமே கண் திறப்பார் இந் நாட்டில்
இனியும் பொறுக்க முடியாது என்னால்
இன்றே தேடும் பணமென்றாள்
தத்துவங்கள் எல்லாமே வீசி எறிவீர் இன்றோடு
கொள்கை என்று சொன்னவற்றை
கொலை பண்ணி எறியுமையா
தமிழன் என்றோர் இனமுண்டு-இங்கே
தனித்துவமாய் அவனுக்குச் சில குணமுண்டு
நாமும் சேர்வோம் அவரோடு
நன்றே வாழ்வோம் பணத்தோடு
இது ஒன்றும் புதினமில்லை வெளிநாட்டில்
பயப்பட ஒன்றுமில்லை, பாவம் நீங்கள்
ஒன்றுமே தெரியாது உங்களுக்கு
எல்லாமே சொல்லி வைத்தாள் பக்குவமாய்
மாண்புமிகு மனைவியவள்
இன்று நாட்டை வெறுத்திட்டான்
நல்ல கொள்கைகளை விட்டிட்டான்
தானிருந்த நிலமைதனை
சத்தியமாய் மறந்திட்டான்
பேராசை பிடித்தவனாய்
இரவு பகலாய் வேலை செய்கின்றான்
பணத்திற்காய் பாசத்தையே விற்றிட்டான்
வட்டிக்குப் பணமென்றால் எப்பவுமே ரெடி என்பான்
நல்ல நட்பையெல்லாம்
தூர வீசி எறிந்திட்டான்
காசுக்காய் நயவஞ்சகங்கள்
சளைக்காமல் செய்திடுவான்
சிறையிலே இருப்பதற்கும்
சித்தமே எப்போதுமென்பான்
சட்டத்தை மதிக்காமல்
கடத்தல்கள் செய்திடுவான்
சேர்த்திட்டான் பணமதனை ஒருவாறாய்
நிம்மதியை இழந்திட்டான்
பணக்காரன் ஆயிட்டான்
பாவம் அவன்
உண்மையில் பணக்காரன் என்றால்
என்னவென்று புரியவில்லை அவனுக்கு
பாவம் அவன்.
Thursday, June 2, 2011
தமிழைத் தேடி.........
புலம்பெயர் நாட்டினிலே
புளுகு தமிழ் கேட்டிடலாம்
நல்ல புறம் சொல்லும் தமிழ் கேட்டிடலாம்
வசை பாடும் தமிழ் கேட்டிடலாம்
நல்ல வஞ்சனை செய்யும் தமிழ் கேட்டிடலாம்
தண்ணி அடித்த பின்னே வரும்
தளதளக்கும் தமிழ் கேட்டிடலாம்
இனிய தமிழ் கேட்க எனக்கோர் ஆசை எழுந்ததனால்
முயன்றே நானும் சென்றேன் தமிழ் நாட்டிற்கு
உல்லாச விடுதி ஒன்றில்
உறைவோம் சில நாள் என்றே
சென்றேன் நானும் உள்ளேயே
காரிகை ஒருத்தி கண் அசைத்தே வரவேற்றாள்
"என்ன வேண்டும்" என்றே இனிதாய் கேட்டு நின்றாள்
அறை ஒன்று வேண்டும் என்றேன் ஆசுவாசமாய்
அதிசயமாய்ப் பார்த்த அவள்
கேட்டாள் மீண்டும் அதை "என்ன வேண்டும்"
அறை ஒன்றே வேண்டும் என்றேன்
அடிக்குமாய்ப்போல் என்னை முறைத்தே
அதே கேள்விதனை அழுத்திக் கேட்டாள்
ஆத்திரம் கொப்பழிக்கச் சொன்னேன் நான்
அறை தர முடியாதா ஆணவம் பிடித்தவளே
அறைந்தாள் என் கன்னத்தில் படீரெனவே
ஐயோ என்று நான் அலறித் துடித்திட்டேன்
என்ன இவள் அடித்தே விட்டாள் என்னை
என்ன பிழை செய்தேன் நான்
ஆற்றாமை மேலோங்க
"றூம்" தானே நான் கேட்டேன்? ஏன் அடித்தாய்
எனக்கென்றேன்
அப்படித் தமிழில் றூம் என்று கேளுமையா
அது என்ன அறை-இங்கே இதுதான் அறை என்றாள்
வெட்கித்து நின்றேன் நான் தமிழை எண்ணி
வீங்கிய கன்னமதை நீவிக்கொண்டே
நேரம் ஓடியது விரைவாக
எனது மணிக்கூடோ ஓடவில்லை இவ்வேளை
மற்றவரை மணி கேட்க என் தன் மானம் தடை போட
புதிதாய் வேண்டுவோம் மணிக்கூடு என்றே
சென்றேன் நானும் வெளியாலே
தேடி அலைந்தேன் மணிக்கூட்டுக் கடையொன்றை
கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை அக்கடையை
மனமது சோர காலது வலிக்க சலித்து நிற்கையிலே
கண்டேன் நானும் ஓர் கனவானை
மறக்காமல் கேட்டேன் நான்
மணிக்கூட்டுக்கடை எங்கேனும் உண்டா
அதிசயமாய்ப் பார்த்தே அவர் சொன்னார்
அப்படி ஒரு கடை எவ்விடமும் இல்லை
மடையா நீ என்று திட்டினேன் மனதாலே
நடந்தேன் இன்னும் சில தூரம் நம்பிக்கையுடனேயே
நல்லவராய்த் தெரிந்த இன்னோருவர்
வந்தார் என் முன்னாலே
கேட்டேன் இரக்கமதாய் அவரிடமும்
மணிக்கூட்டுக் கடையை காட்டும் எனக்கென்று
மிரண்டு போன அம் மனிதர்
தனக்குத் தெரிந்தது தமிழ் மட்டுமே என்றிட்டார்
"ஐயா" பேசுவது நானும் தமிழ்தானே
சோன்னேன் நானும் பவ்வியமாய்
அது என்ன மணிக்கூடு அந்நிய பாசை பேசாதே
கோவமாய்ப் பதில் சொன்னார்
தெரியாதா உங்களுக்கு "watch" என்றேன்
வாச்சா அப்படிப் பேசும் தமிழ் என்றார்
திகைத்தேன் நானும் திரும்பவும் ஓர்முறை
காட்டினார் கடையொன்றை இப்போது
வாங்கினேன் நானும் வாச்சொன்றை
தமிழிற்காய் மீண்டும் வெட்கித்தபடியே
அடைந்தேன் விடுதியை நானும் அலுப்புடனே
அந்தக் காரிகையே மீண்டும் வரவேற்றாள்
அமர்ந்தேன் ஓர் இடத்தில் ஆறுதலாய்
பசியோ சிறிதாய் வயிற்றைக் கிள்ள
பார்த்தேன் நானும் அக்கம் பக்கம்
கோப்பி ஒன்று தட்டில் வந்தது அழகாக
பசியை விரட்ட இதுவா எனக்கு
வந்தே சொன்னாள் அன்புடனே
சாப்பிடுங்க சார் சாப்பிடுங்க
என்னத்தைச் சாப்பிட நான்
பசியோடு உள்ளவனைப் பழிக்காதே நீ என்றேன்
பகிடிவிடாமல் சாப்பிடுங்க இதை என்றாள்
சாப்பாடே இல்லாமல் சாபிடுவதெவ்வாறு
பரிகாசம் செய்யாதே பாவம் உனக்கே என்றேன்
காப்பியைச் சாப்பிடுங்க ஆறினால் அநியாயம் தான் என்றாள்
கோப்பியைக் குடிக்கத்தான் முடியுமென்று
சத்தமாய்ச் சொல்லி என் கன்னத்தில்
நானே அடித்து விட்டேன்
இல்லை அறைந்து கொண்டேன்
தமிழிற்காய் வெட்கித்தபடியே
கோப்பியைக் குடித்துவிட்டே
கனமான சிந்தனையில் நான் இருந்தேன்
சாப்பாட்டுச் சிந்தனையை அறவே கைவிட்டு
சரியான நித்திரை ஒன்றைக் கொள்வோம் இப்போது
என்றே எண்ணி நிற்கையிலே
மீன்டும் வந்தாள்! முழி பிதுங்கியது எனக்கு
தூங்கப் போங்க இப்போ என்றாள்
அதிர்ந்து போனேன் ஐயோ என்றே அலறிவிட்டேன்
தூக்கில் தொங்க விடுவதற்கு
செய்த குற்றமென்ன சொல் என்றேன்
நேரம் என்ன தெரிகிறதா?
தூங்க வைக்கிறேன் பார் என்றாள்
நடுங்கிப் போய் நான் சொன்னேன்
நாளையே போறேன் நாட்டிற்கு
நித்திரை கொள்ள முடியுமா இப்போ நான்
கேட்டேன் படபடக்கும் நெஞ்சுடனே
அதையே சொன்னேன் தானும் என்றாள்
இருந்த தமிழும் மறந்து போக
அடுத்த நாளே வந்து சேர்ந்தேன் இவ்விடமே
தமிழிற்காய் வெட்கித்தபடியே!
குரும்பையூர் பொன் சிவராசா
ponnsivraj@hotmail.com
Monday, May 30, 2011
கள்ளுக் கொட்டில்

தம்பற்றை கள்ளுக்கொட்டிலிலை
சரியான சனக்கூட்டம்
இளையவர் பெரியவர்
இளந்தாரிப் பெடியன்கள்
எல்லோரும் இங்கு சரிசமன் தான்
சமத்துவம் என்பது
சரியாகக் கடைப்பிடிக்கப் படுவதும் இங்கேதான்
தன் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ள
தடுத்திடுவார் சிலபேரை முத்தண்ணை
தடுத்த அந்தச் சில பேரிடமே
கையேந்திக் கள்ளுக் குடிப்பார் அந்தண்ணை
பகுத்தறிவென்பது கள்ளிலிருந்துதானோ பிறக்கிறது
ஆண்கள் மட்டும்தான்
இங்கே அனுமதிக்கப் படுவதனால்
எல்லோரும் இங்கே மன்னர் தான்
ராணி இல்லாத ராயாக்கள்
இவர்கள் பாடு கொன்டாட்டம் தான் இங்கு
வீட்டில் வாயே திறக்காத முத்தண்ணை
இங்கே வந்துவிட்டால் முழுநேரப் பேச்சாளர்
அரசியலில் இருந்து தன் வீட்டு அந்தரங்கம் வரை
அவிட்டு விடுவார் அருமையாக முத்தண்ணை
கேட்போரெல்லாம் மெய்மறந்து
சொக்கித்துப் போய்விடுவார்
வீட்டிலே மனிசிக்குப் பயந்த முத்தண்ணை
கள்ளைக் கொஞ்சம் அடித்ததுமே
முழு வீரனாய் மாறிடுவார்
இண்டைக்கு வீட்டை போய்
அவளின்ரை வாயை அடக்கிறேன் பார் என்பார்
ஊத்தடா இன்னொண்டு என்று சொல்லி
அவர் குடிக்கும் அழகே ஓர் தனி அழகு
அக்கம் பக்கத்தார் ஆரேனும் இருக்கினமா
ஆழ்ந்து பார்த்துத்தான்
வீராப்புப் பேசிடுவார் முத்தண்ணை
அரசியல் விவாதமெல்லாம் இங்கேதான்
அக்கு வேறு ஆணி வேறாய் அலசி ஆராய்வார்
அமெரிக்காவில் ஆட்சியை மாற்றக் கூட
இங்கே திட்டங்கள் தீட்டிடுவார்
கள்ளுக்கொட்டிலிலே அரசியல் பேசிய முத்தண்ணை
பெற்றதோ அரசாங்கத்தில் மந்திரிப் பதவி
அனைத்தின் வளர்ச்சிக்கும்
கள்ளுக் கொட்டில்தான் ஆதாரம்
என்பதே அவரின் வாதம்
Five Star Hotel இலை விஸ்க்கி குடித்தாலும்
பிளாவிலே கள்ளை எடுத்து
குவிந்திருக்கும் எறும்பு பூச்சிகளை
அலாக்காக தட்டி எறிந்து விட்டு
அதை உறிஞ்சிக் குடிக்கும் இன்பம்
எங்கே வருமென்பார் முத்தண்ணை
கலம்பிலும் காமட்சி கள்ளுக் கடையை
திறந்து வைத்தே புகழ் ஏணியின்
உச்சிக்கே போய் விட்டார் இந்தண்ணை
சுவீடனுக்கு வந்த அண்ணர்
கள்ளுக் கொட்டிலைக் காணாது
கலங்கியே போய்விட்டார்
கடைசிக் காலத்தில் கள்ளில்லாமல்
காலம் தள்ளுவதெப்படி என்றே
சோர்ந்துவிட்ட முத்தண்ணைக்கு
கனடாவில் கள்ளுக் கடை திறந்த செய்தி
இன்பத்தை அளித்திடவே
அங்கே மாற்றிவிட்டார் தம் இருப்பிடத்தை
"கள்ளில்லா வாழ்வு பாழ்
கள்ளுக் கொட்டில் இல்லாத நாடு பாழ்"
இதுவே முத்தண்ணையின் தத்துவம்.
Saturday, May 28, 2011
தியாகி திலீபன்

திலீபன் என்றதுமே தித்திக்கும் என் மனது
சோகத்தையும் வென்றதொரு புல்லரிப்பு
என் இதயத்தில் எழுந்து வரும்
உலகத்தில் உன்னதமாய் ஓர் உயிர் பிரிந்ததென்றால்
அது அகிலத்தின் தியாகி அவன் திலீபன் இன்னுயிர் தான்
அகிம்சை என்றோர் ஆயுதத்தை கையிலெடுத்தான்
தன்னை தானே சிலுவையில் அறைந்து கொண்டான்
அன்னையர்கள் ஆறாத துயரத்தில்
தம் மார்பில் அடித்தே கதறி அழ
ஆண்களெல்லாம் தம் கண்களிலே
வழிகின்ற விழி நீரை துடைத்தெறிய
அருமைத் தம்பிகளும் அன்புத் தங்கைகளும்
பச்சிளம் குழந்தைகளும்
அண்ணா! அண்ணா! என்று அழுதிட்ட குரலோ
வானத்தை எட்டி நிற்க
தன் உயிரையும் உடலையும்
துடி துடிக்க தற்கொடையாக்கிவிட்டான்
திலீபனாய் நின்ற அவன் தியாகியாய் மாறிவிட்டான்
என்றும் அன்பான திலீபன்
எப்போதும் அகலாத புன்சிரிப்பு
மற்றவர்க்காய் மட்டும் வாழ்ந்த புனிதனவன்
எம்மவர்க்காய், எம் தமிழிற்காய், தமிழ் ஈழ மீட்பிற்காய்
தன்னையே ஈகின்ற கொடிய விரதமதை
திண்ணமதாய் செய்தே முடித்திட்டான்
தமிழர்க்கு விடுதலை வேண்டி அவன்
பெரும் தவமே செய்திட்டான்
விண்ணிலிருந்து பார்ப்பேன்
விடுதலையை என்றுரைத்தே
சென்றுவிட்டான் வெகுதூரம் எமை விட்டு
நவ இந்தியாவிடம்
நயமாய்க் கேட்டான் நீதியொன்றை
அகிம்சை சாத்வீகம் இவையல்லோ
ஆன்மீக இந்தியாவை இளக வைக்கும் என நினைத்தான்
"உன்னையே வருத்தி உணர்வுகளை அடக்கி
மாற்ற முயன்றாய் நீ அவர் மனதினையே"
வஞ்சகர்கள் நெஞ்சுக்குள் வரவில்லை இரக்கமது
எடுத்திட்டார் உன் இன்னுயிரை
வதைத்திட்டார் எம் தமிழினத்தை
தமிழ்நாட்டுத் தமிழரும் சேர்ந்தே கலங்கி நின்றார்
உன் நிலை கண்டு
காந்தி பிறந்த மண்ணில் தவறுதலாய்ப் பிறந்தவர்கள்
இங்கு தமிழீழத்தில் காந்தீயம் சாவதற்கு
அடிப்படையாய் இருந்திட்டார்
கல்லுக்குள் ஈரமுண்டு கண்டிடலாம் சில வேளை
இந்தக் கயவர் நெஞ்சுக்குள்
கடுகளவும் ஈரமில்லை
வெறி பிடித்த இந்திய ராணுவமே
வெறும் ஆயுதத்தை மட்டுமா ஒப்படைத்தார்
தமிழர் படை உன்னிடத்தில்
எம் மக்கள் உயிரையுமே ஒப்படைத்தார் உனை நம்பி
புத்தரின் புனிதர்கள் கொடியவர் என்பதனால்
காந்தியின் புதல்வர்கள் என்றல்லோ
எண்ணி உமை நாம் நம்பிட்டோம்
துரோகியாய் நீர் இருக்க
தூய நண்பனாய் உனை நினத்தோம்
அபயம் அளிக்க நீர் வருவதாய்
ஆவலுடன் எதிர்பார்த்தோம்
அன்புடன் உமை வரவேற்றோம்
ஆறுதல் தருவாய் நீ எனவே
அக மிக மகிழ்ந்திட்டோம்
பிராந்திய வல்லரசாய் உன் வன்மத்தைக் காட்ட நீ
தெரிவு செய்திட்டாய் ஈழ தேசமதை
உண்ணா நோன்பிருந்தே உம் உள்ளமதை
மாற்ற அவன் முயன்றே தோற்றிட்டான்
தமிழன் உரிமை ஒன்றும் உன் தயவால் கிட்டாது
என்றே உணர்ந்தான் எம் திலீபன்
பூண்டான் கொடிய விரதம் அவன்
நல்லூர்க் கந்தன் வீதியிலே
உணவின்றி நீரின்றி தன் நாக் காய்ந்து
உடலில் உரமின்றி நிற்கத் தயவுமின்றி
மரணத்தை நோக்கி அவன் மகிழ்வுடன் போகையிலும்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!
தமிழீழம் மலரட்டும்!
என்றே எமக்குரைத்தான்
விழிப்பாய் இருங்கள்! விழிப்பாய் இருங்கள்! என
எமை விழித்தே சொன்னான் பல தடவை
பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
பொறுக்கிகள் செய்த அநியாயம் பொறுக்குதில்லையே
பொன்னான எங்கள் தங்கத் திலீபன்
தன் உயிரையே விலை கொடுத்த கொடுமைதனை
நினைக்க நினைக்க நெஞ்சு பொறுக்குதில்லையே
கல்மனம் கொண்ட இந்திய ராணுவமே
கடுகளவும் இல்லையா கருணை உனக்கு
தாய் நாட்டுக்காரர் தருமம் அறிந்தவர்கள்
என்றேதான் நம்பிட்டோம் நாமெல்லாம்
பொல்லாத பாவிகள்
எம் மண்ணை அழித்திட்டார்
நல்ல பண்பை அழித்திட்டார்
எம் பெண்கள் கற்ப்பைப் பறித்திட்டார்
எம் திலீபன் உயிரையும் எடுத்திட்டார்
காந்தியைக் கொல்ல ஒரு கோட்சே
இங்கு எம் திலீபனைச் சாகடிக்க
ஓராயிரம் கோட்சேக்கள்
வெட்கமாயில்லை உங்களுக்கு
காந்தி உயிருடன் இன்றிருந்தால்
உம் செயல் கண்டு தன்னையே மாய்த்திருப்பார்
அன்றே உயிர் நீத்ததனால்
இன்று தப்பிப் பிழைத்துவிட்டார்
நல்லூர்க் கந்தா நான் உனைக் கேட்கின்றேன்
இது நியாயமா சொல்லுமையா
தமிழ்க் கடவுள் நீ என்றால்
தமிழர்க்காய் எம் திலீபன் உயிர் காக்க
ஏன் மறந்தாய் சொல்லுமையா
தமிழர்கள் வாழ்விற்காய்
ஈழ தேசத்தின் விடிவிற்காய்
உன் உடலை வருத்தியே
உயிர் துறந்தாய் திலீபா
மறவாது தமிழ் உலகம் உன்னை
இந்த மாநிலத்தில் தமிழ் மனிதன் உள்ளவரை
ஆண்களுக்குச் சமத்துவம் வேண்டும்

போதும் போதும் பொறுத்தது போதும்
ஆண்களே நீங்களெல்லாம் பொறுத்தது போதும்
பொங்கி எழு ஆண்மகனே
சங்கே முழங்கு என்று பொங்கி எழு ஆண்மகனே
இழந்த உன் உரிமையை வென்று எடுக்க
பொங்கி எழு ஆண்மகனே
அன்று நீ சமையல் அறையை எட்டியும் பார்க்கவில்லை
இன்றோ சமையலிலே நீதான் முன்னணியில்
சட்டி பானை என்றால் என்னவென்றே தெரியாமால் நீ இருந்தாய்
இன்றோ சட்டி பானை கழுவுவதில்
நீதான் முதன்மையாய் இருக்கின்றாய்
டிஸ்வோசர் வேண்ட நீ முயற்சி எடுத்திட்டால்
பெண்ணோ அதை தட்டியே கழித்திடுவாள்
ஆண் சிங்கமாய் அன்று நீ இருந்தாய்
இன்றோ அடுப்பூதும் சுண்டெலியாய் நீ இருக்கின்றாய்
அம்மாவின் கையாலே அறுசுவையும் நீ உண்டாய்
இன்றோ ஐரோப்பாவில் அடுப்படியில் நீ வெந்தே சாகின்றாய்
ஆண்கள் கட்டாயம் சம உரிமை பெற்றே ஆகவேண்டும்
சமையலிலே பெண்ணும் சரி பாதி பங்கு வகித்தே தீரவேண்டும்
அன்று அம்மா அம்மா என்று தான்
அழுதன பிள்ளைகள் எல்லாமே
இன்று அப்பா அப்பா என்று அழுவது ஏனோ
பிள்ளைப் பராமரிப்பில் பெண்களுக்கும்
சம பங்கு தந்தே தீரவேண்டும்
பத்து மாதம் சுமப்பது பெண்களென்றால்
பின்வரும் பத்து வருடங்களும்
ஆண்களா பிள்ளைகளைச் சுமக்கவேண்டும்
சம்பளம் வந்தவுடன் சட்டையும் சீலையும்
வேண்டத் திரிகின்றார் பெண்களெல்லாம்
ஆண்களுக்கும் சம உரிமை வேண்டும்
அவர்களையும் மனிதர்களாய் மதிக்கவேண்டும்
அவர்களுக்கும் உடுபுடவை வேண்ட சம உரிமை வேண்டும்
கோட்டும் சூட்டும் வேண்ட அவர்களுக்கும்
நீ பணம் கொடுக்கவேண்டும்
விருந்தாளிகள் வீட்டுக்கு வருவதென்றால்
அன்று அடுப்படியில் நிற்பதெல்லாம்
ஆண்களாய் இருப்பது முற்றாக மாறவேண்டும்
விருந்தாளிகளுடன் கதை அளப்பதெல்லாம் பெண்களென்றால்
வேலை செய்வதெல்லாம் ஆண்களா
பொங்கி எழு ஆண்மகனே!
சரி பாதி உரிமைக்காய்
இன்றே போர்க்கொடி உயர்த்திடுவாய்
நகை நகையாய் வேண்டி நம் பணத்தை எல்லாம்
கழுத்திலும் கையிலும் பொத்திப் பொத்தி
வைத்திருக்கும் பெண் அவளே
ஆணுக்கும் ஆசைகள் உண்டென்று
நீ என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா
இன்றே அரைவாசி நகையை பெறுமட்டும்
போராட்டம் நடாத்திடு ஆண்மகனே!
அரைப் போத்தல் தண்ணி அடித்திட்டால்
அநியாயம் முழுக்க ஆண்தான் செய்திட்டான்
என்று பிதற்றுகின்ற பெண்ணே
நீ வேண்டும் சாறிக்கும் நகைக்கும்
அழகுசாதனப் பொருளுக்கும்
யார் தருகின்றார் பணம்
அளவாய் தண்ணி அடிப்பதற்கு
ஆண்கள் கட்டாயம் உரிமை பெற்றே ஆகவேண்டும்!
ஆணுக்குச் சமத்துவம் வேண்டி
ஐரோப்பிய நாடெல்லாம்
மூலை முடுக்கெல்லாம்
ஆண்கள் போராட்டம் நடாத்தவேண்டும்
சீறுகின்ற பெண்ணை
வீட்டில் நீ ஓர் சிரிப்பால் மழுப்புவதை
நான் நன்கறிவேன்
இழந்த ஆணின் உரிமைகளை
அகிம்சையால் வென்றெடுக்க
ஒன்று பட்டுப் போராடி வெற்றி பெறவேண்டும் நீ
உன் போராட்டம் வெற்றி பெறும்
பெண்ணுடன் சமத்துவமாய்
ஆணே கட்டாயம் நீ வாழ்ந்திடுவாய்!
குரும்பையூர் பொன் சிவராசா
Friday, May 27, 2011
பொய்க்காதல்

நான் உன் அன்புக்காய் ஏங்கினேன்
நீயோ என்
அழகுக்காய் ஏங்கினாய்
நான் உன்
இதயத்தின் ஆழத்தை தேடினேன்
நீயோ என்
உடம்பில் பொன்னை தேடினாய்
நான் உன்னிடத்தில்
உள்ளத்தை தேடினேன்
நீயோ என்னிடத்தில்
உதட்டை தேடினாய்
நான் உன்
குணத்தை நோக்கினேன்
நீயோ என்
பணத்தை நோக்கினாய்
நான் உன்
நாணயத்தை எதிர்பார்த்தேன்
நீயோ என்
சீதனத்தை எதிர்பார்த்தாய்
உண்மைக் காதல் வாழ வேண்டும்
உன் பொய்க்காதல் சாகவேண்டும்
முடிவெடுத்தேன் நான் முடிவாக
உண்மைய்க் காதலுக்காய்
தூர எறிந்திட்டேன்
உன் பொய்க் காதலையே!
உன்னையும் தான்!
Subscribe to:
Comments (Atom)

